வவுனியாவில் 200 அடி உயர தொலைத்தொடர்பு கோபுரத்தில் ஏறிக் தனது மனைவியை மீட்டுத் தரக் கோரி போராட்டம் மேற்கொண்ட இளைஞர் (கணவன்) நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வவுனியா தேக்கவத்தைப் பகுதியைச் சேர்ந்த 19 வயது இளைஞன் மல்லாவி பகுதியைச் சேர்ந்த 18 வயது யுவதியைக் காதலித்து வீட்டிற்கு அழைத்து வந்திருந்ததுடன், கடந்த ஜூலை மாதம் இருவரும் பதிவுத் திருமணமும் செய்திருந்தனர்.
இந்நிலையில் குறித்த இளைஞனின் வீட்டிற்கு வானில் சென்ற பெண் வீட்டார் குறித்த இளைஞனின் உறவினர்களைத் தாங்கி விட்டு மனைவியைக் கொண்டு சென்றுள்ளதாக வவுனியா பொலிஸில் கணவன் முறைப்பாடு செய்திருந்தார்.
இது தொடர்பில் வவுனியா பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.
தனது மனைவி கடத்தப்பட்ட நிலையில் வாகன இலக்கம், வந்தவர்கள் விபரம் என்பவற்றை வழங்கியும் தனது மனைவியை பொலிஸார் மீட்டுத் தரவில்லை எனவும் பொலிஸார் பக்கச் சார்பாகவும் அசமந்தமாகவும் செயற்படுவதாகத் தெரிவித்தும் குறித்த இளைஞன் கடந்த (27.10.2021) வவுனியா பிரதி பொலிஸ்மா அதிபர் காரியாலயம் முன்பாக கற்குழி பகுதியில் அமைந்துள்ள 200 அடி உயரமான தொலைத்தொடர்பு கோபுரத்தில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டார்.
மூன்று மணிநேர போராட்டத்தினையடுத்து பொலிஸாரும் உறவினர்களும் இணைந்து ஒலிபெருக்கி மூலம் வாக்குறுதி வழங்கு தொலைத்தொடர்பு கோபுரத்திலிருந்து இளைஞனைக் கீழே இறக்கினர்.
இந்நிலையில் தொலைத்தொடர்பு கோபுர அதி உயர் வலையத்தினுள் சென்றமை, தொலைத்தொடர்பு கோபுரத்தில் ஏறி அதனைச் சேதப்படுத்தியமை போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் குறித்த இளைஞன் சம்பவம் இடம்பெற்று ஒரு மாதத்தின் பின்னர் நேற்றையதினம் (29) பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அத்துடன், குறித்த இளைஞனை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
0 Comments